30 மார்ச் 2011

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.

இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர் தன் மனைவி வள்ளி என்பவரின் பெயரில் ஒரு நிதிக் கம்பெனியை முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் துவக்க திட்டமிட்டார்.அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காகத் தருவதாகச் சொன்னார்.

முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் போர்வையில் வந்த சில குண்டர்கள் நேற்று மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.

செய்தியைக் கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்த சகோதரர்கள் உடனே சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். ஆனால் நிறைய முஸ்லிம்கள் அங்கே கூடி நின்று குண்டர்கள் பட்டப் பகலில் மஸ்ஜிதின் அடையாளங்களைத் தகர்த்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சுற்றி காவல்துறையினரும் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.

பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி,காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக சாலை மறியலில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். அதன்பின் ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர்.பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டச் செயலாளர் ஷாஹித் என்பவரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆலம் என்பவரும் இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த அக்கிரமத்திற்குப் பொறுப்புடைய அத்தனை பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக