16 மார்ச் 2011

இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது.

பின்னர் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் எஸ்.எம்.பாக்கர் நிருபர்களிடம் கூறியதாவது,

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் நிலங்களை மீட்டு ஏழை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

ஜமாஅத் மூலம் செய்யப்படும் திருமணப் பதிவை சட்டப் பதிவு போன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் எங்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்.

மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டன. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வோம்.
முஸ்லிம் வேட்பாளர்கள் எதிரணியில் இருந்தால் அவர்களை தோற்கடிக்கவும் பிரசாரம் செய்வோம்.

நாங்கள் தனி மேடை அமைத்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். அதிமுகவே தனி மேடை அமைத்துக் கொடுத்தால் அதிலும் பிரசாரம் செய்வோம். எங்கள் மேடையில் வேட்பாளருக்கு மட்டுமே இடம் இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக