28 மார்ச் 2011

சிரியா:போராட்டம் தொடர்கிறது – மேலும் 12 பேர் மரணம்

டமாஸ்கஸ்:அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் சிரியாவில் மோதல் பரவியுள்ளது. பல இடங்களிலும் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். லதாகியாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

இத்துடன் கடந்த 15-ஆம் தேதி சிரியாவில் துவங்கிய எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 என அரசு தரப்பு கூறுகிறது. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 126 என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு நடக்கும்பொழுது அக்கிரமமான முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் இவர்கள் மரணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஆனால், அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கியால் சுட்டதாக அரசு அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியான பாஆஸின் டமாஸ்கஸின் வடக்குப் பகுதியில் தஃபாஸில் அமைந்துள்ள அலுவலகத்தை எதிர்ப்பாளர்கள் தீவைத்து கொளுத்தினர். தரா நகரத்தில் நிறுவப்பட்டுள்ள சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் தந்தை ஹாஃபிஸுல் ஆஸாதின் சிலை மீது ஏறி எதிர்ப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஹும்ஸ், லடாகியா, தரா ஆகிய நகரங்களில் போராட்டம் தற்பொழுதும் வலுவாக நடைபெற்று வருகிறது. கொல்லப்பட்ட அனைவரும் இந்த நகரங்களிலோ அல்லது அருகிலுள்ள நகரங்களை சார்ந்தவர்களோ ஆவர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, அரசுக்கு எதிரான போராட்டத்தை தணிப்பதற்காக சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் 260 அரசியல் கைதிகளை விடுதலைச் செய்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் அனுபவித்துவரும் அசாதாரணமான உரிமைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

1963-ஆம் ஆண்டு முதல் நாட்டில் அமுலிலிருக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் முக்கிய கோரிக்கையை பரிசீலிக்கலாம் எனவும், சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக துவங்கும் எனவும் அதிபர் அறிவித்த போதிலும் போராட்டம் தணியவில்லை.

இதற்கிடையே,உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி ராய்ட்டர்ஸ் செய்தியாளர் காலித் யஃகூபின் அங்கீகாரத்தை அரசு ரத்துச் செய்தது.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக