05 பிப்ரவரி 2011

இஸ்லாமிய வங்கிக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி


கொச்சி,பிப்.5:கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி துவங்குவதற்காக அம்மாநில அரசு வழங்கிய அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது.

அரசின் முடிவைக் குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்த இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சியின் தலைவருமான சுப்ரமணியம் சுவாமி மற்றும் ஹிந்து ஐக்கியவேதி என்ற அமைப்பின் மாநில செயலாளர் ஆர்.எஸ்.பாபுவும் சமர்ப்பித்த மனுக்களைத்தான் முதன்மை நீதிபதி ஜெ.செலமேஷ்வர், நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திரமேனன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடிச் செய்தது.

இஸ்லாமிய வங்கி மதசார்பற்ற கொள்கைக்கு விரோதமானது என சுட்டிக்காடி இருவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மதசார்பற்ற சமூகத்தில் ஷரீஅத் சட்டத்தின்படி வங்கி செயல்படும் என்ற மனுதாரர்களின் வாதத்தை சம்பந்தமில்லாதது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

முதலீடாக வழங்கப்படும் பணத்தை ஷரீஅத் அனுமதிக்கும் வியாபாரத் திட்டங்களில் முதலீடுச் செய்து பங்குதாரர்களுக்கு வழங்கப்படுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்ற அரசின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

ஷரீஅத் சட்டம் பின்பற்றப்படுவதால் அதற்கு அரசு ஒத்துழைக்காவிட்டால் அது மதரீதியான பாகுப்பாடாகும். தொழில், வியாபாரம், விற்பனை ஆகிய காரியங்களில் ஈடுபட அரசுக்கு அதிகாரமிருக்க மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனங்களுடனும் சேர்ந்து செயல்படலாம் என நீதிமன்றம் தெளிபடுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சட்டங்களுக்கு விரோதமானதுதான் இஸ்லாமிய வங்கி என்ற மனுதாரரின் வாதத்தையும் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

மனுதாரர் மனுவை சமர்ப்பிக்கும் வேளையில் இதனை குறிப்பிடவில்லை எனவும், இக்காரியத்தில் தீர்மானம் எடுக்கவேண்டியது ரிசர்வ் வங்கியாகும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மத அடிப்படையிலான திட்டங்களுக்கு அரசு பணத்தை முதலீடுச் செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமல்ல என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:-
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக