31 ஆகஸ்ட் 2010

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற எண்ணம் பலருக்கு. பஸ் ஸ்டாப்பில் முக்கால் நிமிஷம் காத்திருக்க வேண்டியிருந்தால்கூட நாற்காலியை தேடுவார்கள். வங்கி, பள்ளி, அரசு அலுவலகங்களில் கேட்கவே வேண்டாம்.

சீட்டைவிட்டு நகராத ‘சீட்கள்’ மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக அமெரிக்காவின் கேன்சர் சொசைட்டி சமீபத்தில் ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: உட்கார்ந்தே இருக்கும் வேலை என்றாலும் ஒரு நாளுக்கு 3 மணி நேரத்துக்கு அதிகமாக உட்காரக் கூடாது.

6 மணி நேரத்துக்கும் அதிகமாக உட்கார்ந்திருப்பது ஆபத்து. இப்படி இருந்தால் ஆண்கள் இளைய வயதிலேயே இறப்பதற்கு 18 சதவீதம் அதிக வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். அதாவது, 37%. மற்ற நேரங்களில் உடற்பயிற்சி, வாக்கிங், ஜாக்கிங் செய்தாலும்கூட, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்துதான்.

ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் படுத்தே இருப்பது அதைவிட ஆபத்து. இந்த நிலை நீடித்தால் இளைய வயதிலேயே இறக்கும் ஆபத்து ஆண்களுக்கு 48 சதவீதமும் பெண்களுக்கு 98 சதவீதமும் அதிகம்.

உட்கார்ந்தே இருக்க வேண்டிய வேலை என்றாலும் தொடர்ந்து உட்காராதீர்கள். நடுநடுவே எழுந்து நடந்துவிட்டு வாருங்கள். நின்றுகொண்டு வேலை செய்கிற வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக